செய்திகள்
விபத்து

உளுந்தூர்பேட்டை அருகே விபத்து- சினிமா உதவி இயக்குனர் பலி

Published On 2020-03-24 10:26 GMT   |   Update On 2020-03-24 10:26 GMT
உளுந்தூர்பேட்டை அருகே தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சினிமா உதவி இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை:

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வினோத் காம்ப்ளி (வயது 26). சினிமா உதவி இயக்குனர். இவர் சமீபத்தில் வெளியான மாணிக் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மேலும் பல்வேறு குறும்படங்களை இயக்கி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை தவிர்க்க தமிழக அரசின் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதனால் மாலையில் இருந்து பஸ்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சென்னையில் வேலைபார்க்கும் பலர் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பஸ், மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். அது போல் வினோத் காம்ப்ளி தனது சொந்த ஊரான ஆரப்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டார்.

நள்ளிரவு 1 மணியளவில் உளுந்தூர்பேட்டை புறவழி சாலையில் உள்ள தனியார் பால்பண்ணை எதிரே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டை மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வினோத் காம்ப்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விபத்தில் இறந்த வினோத் காம்பிளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News