செய்திகள்
கைது

பிளஸ்-2 மாணவியை கடத்தி தாலி கட்ட முயற்சி -வாலிபர் உட்பட 3 பேர் கைது

Published On 2020-03-17 15:46 GMT   |   Update On 2020-03-17 15:46 GMT
ஸ்ரீரங்கத்தில் பிளஸ்-2 மாணவியை காரில் கடத்தி கட்டாய தாலி கட்ட முயன்ற வாலிபர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

திருச்சி திருவானைக் காவல் கொண்டையன்பேட்டை வெள்ளாளர் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் நடேசன் (வயது 55 ). இவரது மகள் சாந்தா (18 ). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வந்தார். தற்போது பொதுத் தேர்வு எழுதி வந்தார். நேற்று முன்தினம் சாந்தாவின் அத்தை மகள் கோமதி அவரை கடைக்குப் போகலாம் என்று அழைத்துள்ளார். இதனை நம்பிய அவர் திருச்சி மாம்பழச்சாலை காவேரி பாலம் அருகே சென்றார். அங்கு சாந்தாவை ஒருதலையாக காதலித்து வந்த அவரது அத்தை மகன் பூவரசன் நின்று கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். அதிர்ச்சியடைந்த சாந்தா அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். இந்த நேரத்தில் அங்கு தயாராக நின்ற ஒரு காரில் பூவரசன் சாந்தாவை பிடித்து உள்ளே தள்ளி அங்கிருந்து கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த நடேசன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே சாந்தாவை பூவரசன் பழனி முருகன் கோவிலில் வைத்து கட்டாய தாலி கட்ட முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்தது . உடனே அவர் தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு அங்கு சென்றார். ஒட்டன்சத்திரம் ரெட்டியார் சத்திரம் அருகே அந்த காரை மடக்கினர். பின்னர் போலீசார் உதவியுடன் சாந்தாவை மீட்டார். 

இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து சாந்தாவை கட்டாய திருமணம் செய்ய முயன்ற திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் பூவரசன் (22), அத்தை மகள் கோமதி (20) மற்றும் உறவினர் ஜெயக்கொடி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் சேலம் கீரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (25), திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (17) ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News