தமிழக சுகாதாரத்துறை கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை- உதயநிதி ஸ்டாலின் பேட்டி
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு திருவாரூர் நகராட்சி குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்து அதனை குடித்து பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;-
அரசு மருத்துவமனை எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இது குறித்து திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் சட்டமன்றத்தில் பேசுவார். கொரோனா வைரஸ் தடுப்பது குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். கொரோனா பற்றிய பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடுவதில் காலையில் ஒரு முடிவு, மதியம் ஒரு முடிவு, மாலை ஒரு முடிவு என்ற குழப்பத்தில் தமிழக அரசு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.