செய்திகள்
பெண் சிசு கொலை

பெண் சிசு கொலையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

Published On 2020-03-09 10:22 GMT   |   Update On 2020-03-09 10:22 GMT
மதுரை மாவட்டத்தில் பெண் சிசு கொலை, ஆணவக்கொலை, பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை:

மதுரை மாவட்டத்தில் சில பெற்றோர்கள் ஆண் குழந்தை வேண்டும் என்ற விருப்பத்தினாலும், வறுமை போன்ற குடும்ப சூழ்நிலை காரணமாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பிறந்தால் அதனை வளர்க்க விருப்பம் இல்லாமல் கள்ளிப்பால் போன்ற வி‌ஷ மருந்தினை கொடுத்து கொலை செய்கின்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்த கொடிய பெண் சிசு கொலை போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் மதுரை மாவட்ட காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் பெற்றோர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைகளை வளர்க்க இயலாத சூழ்நிலையின்போது தமிழக அரசின் சார்பில் “தொட்டில் குழந்தைகள் திட்டம்” என்ற சிறப்பான திட்டத்தை அரசு மருத்துவமனையில் செயல்படுத்தி வருகிறது.

மேலும் தமிழக அரசு குழந்தைகள் நல அமைப்பு என்ற அமைப்பினை ஏற்படுத்தி அதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக திட்டங்கள் வகுத்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.

அதோடு மட்டுமின்றி அரசு, தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் பல குழந்தைகள் நல காப்பகங்கள் மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டால் அவர்கள் பெண் குழந்தைகள் காப்பகத்தில் வளர்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

எனவே பொதுமக்களில் எவரும் பெண் சிசுக்கொலை குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News