செய்திகள்
சென்னை ஐகோர்ட்

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண நடவடிக்கை என்ன?- மீன்வளத்துறை இயக்குனர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

Published On 2020-03-02 09:30 GMT   |   Update On 2020-03-02 09:30 GMT
இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக மீன்வளத்துறை இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் மீனவர்கள் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மீனவர்கள் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில், வழக்கமாக வழங்கப்படும், 184 கோடியே 93 லட்சம் ரூபாயுடன், 300 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் மீன் பிடித்தல் உதவி எனும் பெயரில் பாரம்பரிய மீனவர்களுக்கு உதவியாக மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த திட்டத்தின் கீழ், இலங்கை அரசால் படகுகள் சிறைபிடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு நிதியுதவி வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என, தமிழக அரசை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் தீவிர முயற்சியால், 2014-ம் ஆண்டு மே முதல் இதுவரை, இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட 2 ஆயிரத்து 100 மீனவர்களும், 381 மீன்பிடி படகுகளும் மீட்கப்பட்டுள்ளது.

மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, இலங்கை மற்றும் இந்தியா இடையில் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கான நடைமுறையை ஏற்படுத்தி உள்ளது. இரு நாட்டு அதிகாரிகளும், பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடைசியாக 2017 அக்டோபர் மாதம் கூட்டம் கூட்டப்பட்டது.

படகுகள் மூலம் மீன் பிடிக்கும் நடைமுறையை ஆழ்கடல் மீன்பிடிக்கும் கப்பல்களாக மாற்றும் திட்டத்தின் சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வேளாண் துறையை மத்திய அரசு கேட்டுள்ளது.

மத்திய அரசு, 2018-19 ம் நிதியாண்டு முதல் அனைத்து கடலோர மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், படகுகளை ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களாக மாற்றுவதற்கு ஒரு கப்பலுக்கு 15 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கி வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் மதனகோபால் ராவ், மீனவர்களின் மறுவாழ்வுக்காக நீலப்புரட்சி திட்டத்தின்கீழ் தமிழக அரசுக்கு ரூ.300 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள் தமிழக அரசு வக்கீலிடம், மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த வழக்கில் 2 ஆண்டுகளாகியும் ஏன் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக மீன்வளத்துறை இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 16-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

Similar News