செய்திகள்
கோப்பு படம்

காதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற உறவினர்கள்

Published On 2020-02-25 09:59 GMT   |   Update On 2020-02-25 09:59 GMT
புதுவை அருகே காதலி தற்கொலை செய்ததால் காதலனை காதலியின் உறவினர்கள் உயிரோடு எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேதராப்பட்டு:

புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் ராகவன் (வயது 22). ஐதராபாத்தில் டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று மாலை குயிலாப்பாளையம் அருகே உள்ள கோட்டைமேட்டில் எரித்து கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் கொலைக்கான காரணம் மற்றும் அதன் பின்னணி விவரங்கள் தெரிய வந்தன.

ராகவன் அதே பகுதியை சேர்ந்த அருணா (22). என்ற பெண்ணை காதலித்து வந்தார். அருணா நர்சிங் படித்து விட்டு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.

இவர்களது காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்தது. அருணா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் காதலை கைவிட மறுத்தனர்.

இதனால் அருணாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்தனர். அருணாவை வீட்டை விட்டு வெளியே விடாமல் அடைத்து வைத்திருந்தனர்.

இந்த நிலையிலும் ராகவனுடன் அருணா போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

இதை அறிந்து வீட்டில் உள்ளவர்கள் அருணாவை கண்டித்தனர். இதனால் 4 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவல் அறிந்த ராகவன் ஐதராபாத்தில் வைத்து தனது கையை கிழித்துக்கொண்டு கலாட்டாவில் ஈடுபட்டார். அவரை கடை முதலாளியும், மற்றவர்களும் அங்கிருந்து புதுவைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று ராகவன் தனது நண்பர் சிவநேசனுடன் சேர்ந்து மது குடித்தார். அப்போது வைத்திக்குப்பத்தை சேர்ந்த அவரது நண்பர் சஞ்சய் அங்கு வந்தார். அவர் இருவரையும் வெளியே எங்காவது சென்று வரலாம் என கூறி அழைத்தார்.

அதன்படி ராகவன், சிவநேசன் இருவரும் சஞ்சயின் மோட்டார் சைக்கிளில் ஏறினார்கள். 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புதுவை நோக்கி வந்தனர்.

கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகே வந்தபோது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்து பதுங்கி இருந்த 6 பேர் அவர்களை வழிமறித்தனர்.

ஆனால், அவர்களிடம் சிக்காமல் மோட்டார் சைக்கிளை கருவடிக்குப்பம் நோக்கி ஓட்டி வந்தனர். கோட்டக்குப்பம் கறிக்கடை சந்து சாலை வழியாக சென்ற போது 6 பேரும் சுற்றி வளைத்தனர்.

அதை தடுக்க முயன்ற சிவநேசனை கத்தியால் குத்தினர். பின்னர் ராகவனை பிடித்துக் கொண்ட அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்றார்கள்.

அவரை கோட்டை மேட்டுக்கு கொண்டு சென்று அரிவாளால் வெட்டி உள்ளனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை ஊற்றி அவர் மீது தீ வைத்தனர்.

இதில், அவர் உயிர் இழந்தார். கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

ராகவனை அருணாவின் தாய் மாமா குள்ள ரமேஷ் மற்றும் அருணாவின் அண்ணன், உறவினர்கள், மேலும் 4 பேர் சேர்ந்து கடத்தி கொலை செய்தது தெரிய வந்தது. அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அருணா தற்கொலை செய்ததால் அதற்கு காரணமாக இருந்த ராகவனை கொன்றதாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராகவனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற சஞ்சய்க்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

குள்ள ரமேஷ் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி ராகவனை சஞ்சய் அழைத்து வந்து குள்ள ரமேசிடம் சிக்க வைத்துள்ளார்.
Tags:    

Similar News