மாமல்லபுரத்தை அழகுபடுத்தும் விவகாரம்- அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை:
உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தை அழகு படுத்துவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், ஐகோர்ட்டு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார், மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய தமிழக சுற்றுலா துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மற்றும் தொல்லியல் துறை இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டனர். மேலும், இந்த குழு கூடி விவாதித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுற்றுலாத்துறை சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மாமல்லபுரத்தில் உள்ள விடுதிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், வழி காட்டிகளுக்கு விதிமுறைகள் வகுக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவையான நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய மாநில அரசு அதிகாரிகளின் கூட்டம் நேற்று நடை பெற்று உள்ளதாகவும், அந்த கூட்டத்தின் விவாதிக்கப்பட்ட விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
தொல்லியல் துறை தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசு தான் முடி வெடுக்க வேண்டுமே தவிர, தொல்லியல்துறை அல்ல என குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 11-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.