செய்திகள்
கைது

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்- மாணவன் கைது

Published On 2020-02-24 04:20 GMT   |   Update On 2020-02-24 04:20 GMT
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவிக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த மாணவனை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் வேப்பனபள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இவர் வேப்பனபள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் மாணவி ஒருவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார். காலையிலும், மாலையிலும் அவர்கள் சந்தித்து பேசிக்கொள்வது வழக்கம்.

அதன்படி கடந்த 22-ந்தேதி அன்று காலை வேப்பனபள்ளி பஸ்நிலையத்தில் மாணவியும் அந்த மாணவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த மாணவரின் நண்பர்களான ஜோடுகொத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜா (வயது 26), திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரி வாலிபர் மஞ்சு என்ற மஞ்சுநாத் (22) ஆகியோர் அங்கு வந்தனர்.

அப்போது அந்த மாணவன் தனது காதலியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். சிறிது நேரம் அவர்கள் 4 பேரும் பேசிக்கொண்டிருந்தனர்.

அதன்பிறகு மாணவிக்கு குளிர்பான பாட்டிலை கொடுத்து குடிக்க வைத்தனர். தன்னுடைய காதலன் சொன்னதற்காக அந்த குளிர்பானத்தை மாணவி குடித்தார். ஆனால் அந்த குளிர்பானத்தில் ஏற்கனவே மதுவை ராஜா, மஞ்சுநாத் ஆகியோர் கலந்து வைத்திருந்தனர். இது மாணவிக்கு தெரியாது.

அந்த குளிர்பானத்தை குடித்த மாணவி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார். பின்னர் மாணவியை அவர்கள் 3 பேரும் சேர்ந்து பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள புதர் பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி ஊருக்கு சென்று தனக்கு நடந்த விவரத்தை தாயாரிடம் கூறினார். அவரின் தாயார் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கற்பகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இன்று காலை போக்சோ சட்டத்தின் கீழ் மாணவனை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

தலைமறைவாக உள்ள ராஜா, மஞ்சுநாத் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News