புதுவையில் மாட்டுவண்டியுடன் மாணவர் காங்கிரஸ் ஊர்வலம்
புதுச்சேரி:
புதுவை மாநில மாணவர் காங்கிரஸ் சார்பில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும் மாட்டுவண்டி மற்றும் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
புதுவை ராஜீவ்காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு மாணவர் காங்கிரஸ் மாநில தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல்வாஸ்னிக், முன்னாள் மத்திய மந்திரி வீரப்பமொய்லி, ராகவன் எம்.பி, செயலாளர் சஞ்சய்தத் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கள் ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணராவ், முன்னாள் மாணவர் காங்கிரஸ் தலைவர் சங்கர், காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவர் வீரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாட்டு வண்டியிலும், திறந்த ஜீப்பிலும் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாணவர் காங்கிரசார் ஊர்வலமாக வந்தனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டம் வேண்டாம் என்ற பதாகைகளையும், தேசியகொடியையும் ஏந்தி வந்தனர். ஊர்வலம் தலைமை தபால்நிலையத்தை அடைந்தது. அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.