செய்திகள்
பலியான மரிய சூசை

செஞ்சி அருகே ஏரியில் மூழ்கி மாணவி உள்பட 2 பேர் பலி

Published On 2020-02-23 12:20 GMT   |   Update On 2020-02-23 12:20 GMT
செஞ்சி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நல்லாண்பிள்ளை பெற்றாள் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி(வயது 12). அதே பகுதியை சேர்ந்தவர் மோனிஷா(13).இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்த நிலையில் பிரியதர்ஷினி, மோனிஷா ஆகிய 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஏரிக்கு மீன்பிடிக்க சென்றனர். சிறுமிகள் 2 பேரும் ஏரியில் இறங்கி மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் எதிர்பாராதவிதமாக ஏரியில் உள்ள ஆழமான பகுதிக்கு சென்றனர். சிறுமிகள் 2 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...என்று குரல் எழுப்பினர்.

அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிறுமிகள் 2 பேரும் தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்தனர். உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்று சிறுமிகளான பிரியதர்ஷினி, மோனிஷா ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிகளை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரியதர்ஷினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மோனிஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபடுகிறது. இது குறித்து நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசில் புகார் செய்யபட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் செஞ்சி அருகே உள்ள மேல்பாப்பாம்பாடி பகுதியை சேர்ந்தவர் மரிய சூசை என்கிற சின்னையன்(வயது 55).இவர் அந்த பகுதியில் உள்ள ஏரிக்கு மீன்பிடிக்க செல்வதாக வீட்டில் கூறி சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் மரிய சூசை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் ஏரிக்கு சென்று அவரை தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.ஏரியில் இறங்கி அவரை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஏரியில் கிடந்த மீன் வலையில் சிக்கி இறந்த மரியசூசையின் உடலை கைப்பற்றினர். இது குறித்து தகவல் அறிந்த நல்லாண் பிள்ளை பெற்றாள் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரியசூசையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News