லாரி மீது பைக் மோதல்- பிளஸ்-2 மாணவன் பலி
பெரியபாளையம்:
பெரியபாளையத்தை அடுத்த திருகண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 17). செங்குன்றம் எம்.ஏ. நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இன்று காலை பள்ளி சார்பில் ‘விட்டமின்சி’ குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் செங்குன்றம் அம்பேத்கர் நகரில் இருந்து அலமாதி வரை நடந்தது.
இதல் சுரேந்தர், உடன் படிக்கும் நண்பரான சோத்து பெரும்பேடு பகுதியை சேர்ந்த தனுஷ்பாலாஜி (17) உள்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் சுரேந்தரும், தனுஷ்பாலாஜியும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
அலமாதி, எடப்பாளையம் அருகே செங்குன்றம் திருவள்ளூர் சாலையில் வந்து கொண்டு இருந்த போது சாலையோரத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே சுரேந்தர் பலியானார். தனுஷ்பாலாஜி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தனுஷ் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் சோழவரம் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பலியான சுரேந்தரின் உடல் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.