திட்டங்களை தடுப்பதாக தவறான தகவல்களை பரப்புகின்றனர் - கிரண்பேடி
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையில் கடுமையான மோதல் இருந்து வருகிறது.
அவ்வப்போது இந்த மோதல் உச்சகட்டத்தை அடையும். இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான புகார்களை தெரிவிப்பர். அமைச்சர்கள் தரப்பில் கவர்னர் கிரண்பேடி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் திட்டமிட்டு தடுக்கிறார். திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்.
மத்திய மந்திரிகளை டெல்லிக்கு சென்று சந்தித்து அரசு திட்டங்களுக்கு நிதி வழங்க வேண்டாம் என கூறுவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் திட்டங்களை தடுப்பதாக தவறான தகவல்களை பரப்புவதாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கவர்னர் மாளிகை அலுவலகம் எந்தவொரு நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நிதித்துறையின் முன்மொழியப்பட்ட திட்டத்தை தடுத்ததில்லை. திட்டங்களை தடுப்பதாக முற்றிலும் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.
சென்டாக் மாணவர் சேர்க்கை விவகாரத்தில் 7 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. மாணவர்களை மிரட்டி தொடர்ந்து பணம் பறிக்க அவர்களுக்கு அதிகாரம் தந்தது யார்? அதை புலனாய்வாளர்கள் வெளிப்படுத்தும் கட்டாயத்தில் உள்ளனர்.
புதுவையில் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் 50 சதவீத இடங்களை பெற சட்டம் கொண்டு வரப் போவதாக கூறியுள்ளது நல்லது. அது சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும். கவர்னர் மாளிகையில் ஒரு நபர் கூட கூடுதலாக பணியாற்றவில்லை. மனித வளம் வீணாகுவதை நான் விரும்புவதில்லை.
இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.