செய்திகள்
கோப்பு படம்

பசை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து - ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

Published On 2020-02-22 10:27 GMT   |   Update On 2020-02-22 10:27 GMT
சேலம் செவ்வாய்பேட்டை அருகே பசை தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.
சேலம்:

சேலம் செவ்வாய்பேட்டை மற்றும் பிள்ளையார் கோவிலுக்கு இடைபட்ட பகுதியில் ராஜகணபதி எனபவருக்கு சொந்தமான பசை தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இன்று அதிகாலை ஆலையில் தீ பிடித்து, கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் ஆலையிலிருந்து அதிக அளவிலான புகை வெளியேறி அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதை கண்ட அக்கம்- பக்கத்தினர் உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 20 நிமிடத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் ஆலையின் உள்ளே இருந்த பசை தயாரிப்பு மூலப்பொருளான ஸ்டார்ச் மூட்டைகள், விறகுகள், எந்திரங்கள் என ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால், அக்கம், பக்கத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News