இளம்பெண் வாயில் விஷம் ஊற்றி கொல்ல முயற்சி: கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது
வேட்டவலம்:
வேட்டவலம் அடுத்த கோணலூர் விழுப்புரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமன் (45). விவசாயி. இவரது மகள் ஜோதி (23). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரவி (49) விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (35). அவரது தம்பி குமாரகிருஷ்ணன்.
ராமன் விவசாய நிலமும், ரவி விவசாய நிலமும் அருகருகே இருப்பதால் நிலம் சம்மந்தமாக இரு குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை ராமன் மகள் ஜோதி வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது ரவி குடும்பத்தினர் ஜோதியிடம் தகராறில் ஈடுபட்டனர்.
பின்னர் வீட்டில் இருந்து பூச்சி கொல்லி மருந்தை எடுத்து வந்து ஜோதியின் வாயில் ஊற்றினர். இதனால் ஜோதி கத்தி கூச்சலிட்டார். மகளின் அலறல் சத்தம் கேட்ட ராமன் வெளியே வந்து பார்த்து ஜோதியின் வாயில் விஷம் ஊற்றுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ராமன் வருவதை கண்ட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையில் வாயில் விஷம் ஊற்றியதால் ஜோதி மயங்கி விழுந்தார். அவரை மீட்ட அவரது தந்தை ஜோதியை திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராமன் வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரனை நடத்தி வருகிறார்.