செய்திகள்
கைது

புதுவண்ணாரப்பேட்டையில் கள்ளக்காதலியின் தாயை குத்திக்கொன்ற டிரைவர்

Published On 2020-02-18 05:59 GMT   |   Update On 2020-02-18 05:59 GMT
புதுவண்ணாரப்பேட்டையில் பணம் கேட்டு தகராறு செய்த கள்ளக்காதலியின் தாயை கொலை செய்த வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:

புதுவண்ணாரப்பேட்டை அம்பேத்கர் நகர், ஜீவா நகர் மெயின் தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர். சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி யுவராணி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள யுவராணி குழந்தைகளுடன் செங்கல்பட்டில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி உள்ளார். தற்போது வீட்டில் சந்திரசேகர் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சந்திரசேகருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் தனலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

கடந்த சில மாதங்களாக தனலட்சுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை கண்ட சந்திரசேகர் அவருடன் பழகுவதை குறைத்தார். ஆனால் தனலட்சுமி அடிக்கடி சந்திரசேகரிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார்.

இதற்கு தனலட்சுமியின் தாய் ரத்னாவதி (60) மற்றும் 17 வயது மகளும் உடந்தையாக இருந்தனர். இதனால் சந்திரசேகருக்கும் தனலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று நள்ளிரவு தனலட்சுமி அவரது தாய் ரத்னாவதி, மகள் ஆகியோர் சந்திரசேகர் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சந்திரசேகரின் வேன் கண்ணாடியையும் அடித்து உடைத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர் வீட்டில் இருந்த கத்தியால் ரத்னாவதி, தனலட்சுமி, அவரது மகள் ஆகியோரை சரமாரியாக குத்தினார்.

இதில் வயிற்றில் பலத்த காயம் அடைந்த ரத்னாவதி சம்பவ இடத்திலேயே பலியானார். தனலட்சுமியும் அவரது மகளும் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியபடி கிடந்தனர்.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News