செய்திகள்
தற்கொலை

ஆவடி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

Published On 2020-02-18 05:18 GMT   |   Update On 2020-02-18 05:18 GMT
குடும்பத்தகராறில் இளம் பெண் 2 குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை:

ஆவடியை அடுத்த சேக்காடு சிங்காரம் நகரில் வசித்து வருபவர் முத்துசாமி. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். இவரது மனைவி விஜயலட்சுமி (23). இவர்களது மகன் கவிசரன் (2½), மூன்று மாத குழந்தை விஷ்வந்த்.

இவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக அதே பகுதியில் உள்ள விஜயலட்சுமியின் பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தனர். கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த விஜயலட்சுமி 2 குழந்தைகளுடன் சிங்காரம் நகரில் உள்ள வீட்டிற்கு செல்வதாக கணவரிடம் கூறிச்சென்றார். சிறிது நேரம் கழித்து முத்துசாமி வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு மனைவியும் குழந்தைகளும் இல்லை.

பல இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து முத்துசாமி ஆவடி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே இன்று அதிகாலை இந்து கல்லூரி ரெயில் நிலையம் அருகே விஜயலட்சுமி, அவரது மகன்கள் கவிசரன், விஷ்வந்த் ஆகியோர் உடல் துண்டான நிலையில் இறந்து கிடந்தனர்.

விஜயலட்சுமி 2 குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. நேற்று நள்ளிரவே அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. இரவு நேரம் என்பதால் அவர்கள் இறந்தது உடனடியாக தெரியவில்லை.

தகவல் அறிந்ததும் ஆவடி ரெயில்வே போலீசார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தால் இன்று காலை சென்னை மார்க்கமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மின்சார ரெயில் பாதையில் இயக்கப்பட்டன. இதனால் மின்சார ரெயில் சேவையிலும் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News