செய்திகள்
கொலையுண்ட ராஜேஷ்.

ஆவடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை

Published On 2020-02-18 05:11 GMT   |   Update On 2020-02-18 05:11 GMT
ஆவடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:

ஆவடியை அடுத்த பூம்பொழில் நகரில் வசித்து வருபவர் நாகராணி. இதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ராஜேஷ் என்கிற புஜ்ஜி (36). ஆட்டோ டிரைவர்.

நேற்று இரவு வீட்டில் இருந்த ராஜேசின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியபடி வெளியில் சென்ற ராஜேஷ் பின்னர் வரவில்லை. அவரை தாய் நாகராணி தேடி வந்தார்.

இந்த நிலையில் அவர்களின் கறிக்கடை அருகே ராஜேஷ் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலை முழுவதும் கல்லால் கொடூரமாக தாக்கப்பட்டு இருந்தது.

ஆனால், அந்த இடத்தில் கொலை நடந்ததற்கான தடயங்கள் இல்லை. ராஜேசை மர்மநபர்கள் வேறு இடத்தில் கொலை செய்துவிட்டு உடலை இங்கு வந்து வீசி சென்றிருப்பது தெரிய வந்தது.

நேற்று இரவு கோவில் பதாகையில் உள்ள மதுக்கடையில் ராஜேஷ் இருந்தபோதும், அவர் செல்போனில் யாருடனோ ஆவேசமாக பேசி உள்ளார். எனவே போனில் பேசிய மர்மநபர் ராஜேசை அழைத்து தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜேஷ் கடைசியாக செல்போனில் யார் - யாரிடம் பேசினார் என்ற விவரத்தை சேகரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News