செய்திகள்
கொலை செய்யப்பட்ட ராமமூர்த்தி , மாரியம்மாள்.

ஓட்டப்பிடாரம் அருகே மனைவி-கள்ளக்காதலன் வெட்டிக்கொலை- தொழிலாளி வெறிச்செயல்

Published On 2020-02-16 12:02 GMT   |   Update On 2020-02-16 12:02 GMT
ஓட்டப்பிடாரம் அருகே கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி மற்றும் கள்ளக்காதலனை தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓட்டப்பிடாரம்:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை புங்கவர் நத்தம் கிராமம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சண்முகம்(வயது 58). மேள கலைஞர். இவரது முதல் மனைவி இறந்து விட்டார்.

இதையடுத்து மாரியம்மாள்(45) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். மாரியம்மாள் புங்கவர்நத்தம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்து வந்தார். சண்முகத்திற்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

இதில் 3 மகள்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கடைசி மகனுக்கு மட்டும் திருமண மாகவில்லை. அவர் கோவையில் வேலைபார்த்து வருகிறார். இதனால் வீட்டில் கணவன்-மனைவி மட்டும் வசித்து வந்தனர்.

அதே பகுதியை சேர்ந்தவர் சித்திரவேல் என்பவரின் மகன் ராமமூர்த்தி(28). புங்கவர்நத்தம் பஞ்சாயத்தில் குடிநீர் ஆபரேட்டராக பணியாற்றி வந்த இவர், மாரியம்மாளின் வீட்டிற்கு அருகில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

அப்போது ராமமூர்த்திக்கும், மாரியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதையறிந்த சண்முகம் 2 பேரையும் கண்டித்துள்ளார். எனினும் அவர்கள் தொடர்ந்து தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இதனால் அவர்களை கையும், களவுமாக பிடிக்க சண்முகம் திட்டமிட்டார். அதன்படி நேற்றிரவு சண்முகம் தனது வீட்டில் மது குடித்து போதையில் இருப்பது போல் நடித்து படுத்து கிடந்தார்.

அவர் போதையில் கிடப்பதாக நினைத்து ராமமூர்த்தி, சண்முகம் வீட்டிற்கு வந்துள்ளார். நள்ளிரவில் ராம மூர்த்தியும், மாரியம்மாளும் தனிமையில் இருந்துள்ளனர். அந்த நேரத்தில் சண்முகம் எழுந்து சென்றார். படுக்கையில் மனைவி மாரியம்மாள் மற்றும் ராமமூர்த்தி இருப்பதை கண்டு ஆத்திரமடைந்தார்.

அவர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் ராமமூர்த்தியின் தலை துண்டிக்கப்பட்டது. மாரியம்மாளுக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியானார்கள்.

இதைத்தொடர்ந்து சண்முகம் பசுவந்தனை போலீஸ் நிலையத்திற்கு ரத்தக்கரை படிந்த அரிவாளுடன் சென்று சரண் அடைந்தார். தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை வெட்டிக் கொன்று விட்டதாக கூறினார்.


இதையடுத்து சம்பவ இடத்திற்கு மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், பசுவந்தனை இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட ராமமூர்த்தி, மாரியம்மாளை உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சண்முகத்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News