பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு
ஊத்துக்கோட்டை:
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த செப்டம்பர் 28-ந் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
முதலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட்டனர். தற்போது 3200 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
பூண்டி ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறக்கப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் 30-ந் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு 453 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 30.43 அடியாக பதிவானது. 1842 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
இதற்கிடையே பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு அனுப்பப்பட்ட தண்ணீர் நேற்று இரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளது.