செய்திகள்
இலங்கை சிறையில் மீனவர்

இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 11 பேர் கடும் நிபந்தனையுடன் விடுவிப்பு

Published On 2020-02-12 03:25 GMT   |   Update On 2020-02-12 03:25 GMT
இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 11 பேர் கடும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 11 மீனவர்களும் விரைவில் தமிழகம் வந்து சேருவார்கள்.
ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 28-ந் தேதி ஸ்வீட்டர் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் ஸ்வீட்டர், ரூமஸ், அக்வின், ரவிங்ஸ்டன், ராஜ், ராமர், டேவிட், ஆறுமுகம், சேவியர், முனியசாமி உள்பட 11 பேர் மீன்பிடிக்க சென்றிருந்தனர். எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்கள் நடுக்கடலில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 11 மீனவர்களும் நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது நீதிபதி அந்தோணிபிள்ளை சூட்சன், 11 மீனவர்களையும் விடுதலை செய்ததுடன் படகை அரசுடைமையாக்குவதாக உத்தரவிட்டார். மேலும் இனி அந்த 11 மீனவர்களும் மீண்டும் இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வந்து கைது செய்யப்பட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என கடும் நிபந்தனை விதித்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். விடுதலை செய்யப்பட்ட 11 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் விரைவில் தமிழகம் வந்து சேருவார்கள் என கூறப்படுகின்றது.

இதுபற்றி பாம்பனில் உள்ள நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் கூறியதாவது:-

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் படகை இலங்கை அரசுடைமை ஆக்குவோம் என்ற உத்தரவு மிகுந்த வேதனைக்குரியது. ஒரு படகின் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் வரை இருக்கும்.

மின்பிடிக்க செல்லும் படகை அரசுடைமை ஆக்கும் பட்சத்தில் அதை நம்பியுள்ள மீனவ குடும்பங்கள் வறுமையில் வாட நேரிடும். ஆகவே இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இலங்கை அரசோடு பேசி இலங்கை வசம் உள்ள அனைத்து படகுகளையும் மீட்டு தமிழகம் கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News