செய்திகள்
கைதான சுரேஷ்

வருவாய் அலுவலர் கணவர் தற்கொலையில் கிராம நிர்வாக அலுவலர் கைது

Published On 2020-02-11 06:37 GMT   |   Update On 2020-02-11 06:37 GMT
தாராபுரம் அருகே வருவாய் ஆய்வாளர் கணவர் தற்கொலை சம்பவத்தில் கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூங்கா அருகே உள்ள சிட்டி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் சுதா (35). தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் வேலுச்சாமி (40). டிரைவர். காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

தாராபுரம் காலேஜ் ரோடு பகுதியில் குடியிருந்து வருபவர் சுரேஷ். மாம்பாடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சுதாவிற்கும் பழக்கம் எற்பட்டது. பின்னர் கள்ளக்காதலாக மாறியது. சுரேஷ் அடிக்கடி சுதா வீட்டிற்கு சென்று வந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன் சுரேஷ், சுதா வீட்டில் இருந்தார். அப்போது சுரேசின் மனைவி அங்கு வந்தார். அவர் சுதாவை கண்டித்தார். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் சுதா தனது கணவர் வேலுசாமியை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த வேலுச்சாமி தாராபுரம் உப்புத்துறை பாளையம் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் வேலுச்சாமி உடலை கைப்பற்றி சோதனை நடத்தியபோது அவரது பேண்ட் பாக்கெட்டில் இரு கடிதம் இருந்தது. அதில் தனது தற்கொலைக்கு மாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் தான் காரணம் என எழுதி இருந்தார். கடிதத்தில் சுரேசின் செல்போன் எண்ணும் எழுதப்பட்டு இருந்தது.

இந்த தகவல் கிடைத்ததும் சுரேஷ் தாராபுரத்தில் இருந்து தப்பி விட்டார். அவரை கைது செய்யாமல் வேலுச்சாமியின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என அவரது உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் நொச்சிப்பாளையத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் சுரேசை கைது செய்தனர். பின்னர் அவரை காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

வேலுச்சாமி மனைவி சுதா கணவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.


Tags:    

Similar News