செய்திகள்
கைது

அரசு பள்ளியில் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

Published On 2020-02-03 04:35 GMT   |   Update On 2020-02-03 04:35 GMT
அன்னூர் அருகே அரசு பள்ளியில் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கவுண்டம்பாளையம்:

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (50). இவர் காட்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 23 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் 7, 8-ம் வகுப்புகளுக்கு அறிவியல் பாடம் நடத்தி வருகிறார். ஆசிரியர் நடராஜன் பள்ளி நேரத்தில் வகுப்பறையில் 7, 8-ம் வகுப்பு மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இந்நிலையில் ஆசிரியர் நடராஜன் கடந்த டிசம்பர் மாதம் 5-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 30-ந்தேதி வரை 7-ம் வகுப்பு படித்து வரும் 12 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பாடம் கற்றுத் தருவதாக கூறி துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த மாணவி தனது வகுப்பு லீடரிடம் புகார் தெரிவித்தார். அப்போது ஆசிரியர் நடராஜனால் அந்த மாணவியும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட 7-ம் வகுப்பு மாணவி பெண் ஆசிரியை ஒருவரிடம் இதுகுறித்து முறையிட்டார். அவரது அறிவுறுத்தலின் பேரில் பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியில் இருந்த புகார் பெட்டியில் ஆசிரியர் நடராஜன் குறித்து புகார் மனு எழுதி போட்டார். ஆசிரியர் மீது மாணவி தெரிவித்த பாலியல் புகார் விசாரணைக்கு வந்தபோது மாணவியை மிரட்டி புகாரை வாபஸ் பெற வைத்தனர்.

ஆனாலும் ஆசிரியர் நடராஜன் தொடர்ந்து புகார் தெரிவித்த மாணவியிடம் பாலியல் தொல்லை செய்து வந்தார். இதையடுத்து வேறு வழியில்லாமல் மாணவி ஆசிரியரின் அத்துமீறல் தொடர்பாக தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாணவியின் தந்தை துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஆசிரியர் நடராஜனிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

மாணவி பலமுறை எச்சரித்தும் ஆசிரியர் நடராஜன் திருந்தவில்லை என்பதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து ஆசிரியர் நடராஜன் மீது அனைத்து மகளிர் போலீசார் சிறார் பாலியல் துன்புறுத்தல் பிரிவில் (போக்சோ சட்டம்) வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நடராஜன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பாக போலீசார் கூறும்போது ஆசிரியர் நடராஜன் 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார். இவர் அப்பள்ளியில் படிக்கும் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. தற்போது 7-ம் வகுப்பு மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் நடராஜன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக குழந்தைகள் நல அமைப்பு மற்றும் பள்ளி கல்வித்துறைக்கும் பரிந்துரை செய்து உள்ளோம். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கவுன்சிலிங் வழங்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது என்றனர்.

மேலும் ஆசிரியர் குறித்து புகார் பெட்டியில் புகார் செய்தும், அதை மிரட்டி வாபஸ் வாங்க சொன்னது யார் என்பது குறித்தும் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
Tags:    

Similar News