செய்திகள்
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2020-01-28 03:40 GMT   |   Update On 2020-01-28 03:40 GMT
கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது.
ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, 3 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். ராமேசுவரம் மீனவர்களை மிரட்டியதுடன், மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர்.

மேலும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 11 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 11 பேரையும் இலங்கையின் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடுக்கடலில் இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறல் ராமேசுவரம் மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை மீனவ அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
Tags:    

Similar News