திருப்பூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- நடன பயிற்சி ஆசிரியையின் தந்தை கைது
திருப்பூர்:
திருப்பூரை சேர்ந்த 8 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள நடன பள்ளியில் நடன பயிற்சிக்கு சென்று வந்தார். அப்பள்ளி ஆசிரியை அவருக்கு நடன வகுப்பு எடுத்து வந்தார். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையும் நடன பயிற்சி அளிக்கப்படும்.
அதன்படி சிறுமி நேற்று நடன பயிற்சிக்கு சென்றார். ஆனால் குடியரசு தினம் என்பதால் பயிற்சி அளிக்கவில்லை. நடன பயிற்சி ஆசிரியையும் வெளியில் சென்று இருந்தார். அப்போது வீட்டில் இருந்த நடன பயிற்சி பள்ளி ஆசிரியையின் தந்தை சரவணன் (50) சிறுமியை வீட்டிற்குள் அழைத்தார். பின்னர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார். இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினார். இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சரவணன் வீட்டிற்கு சென்றனர். அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் சரவணன் ஒப்படைக்கப்பட்டார்.
அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.