செய்திகள்
தோவாளை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பாண்டி வழங்கியபோது எடுத்தபடம்.

பிச்சை எடுத்த பணத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு உதவிய முதியவர்

Published On 2020-01-24 02:07 GMT   |   Update On 2020-01-24 02:07 GMT
66 வயது நிரம்பிய முதியவர் கடந்த 18 ஆண்டுகளாக பிச்சை எடுத்த பணத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறார்.
கன்னியாகுமரி :

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் புல்பாண்டி என்ற பாண்டி (வயது 66). இவர், மனைவி இறந்த பின் 1979-ம் ஆண்டு மும்பைக்கு சென்றார். அங்கு ஒரு கோவிலில் தூய்மை பணியை மேற்கொண்டார்.

பின்னர், 2000-ம் ஆண்டு ஊருக்கு வந்த அவர் திருச்செந்தூர் பகுதியில் பிச்சை எடுக்க ஆரம்பித்தார். கிடைத்த பணத்தில் தனது தேவையை பூர்த்தி செய்த பின் மீதம் உள்ள பணத்தில் உதவி செய்ய தொடங்கினார். அதன்படி கடந்த 18 ஆண்டுகளாக பிச்சை எடுத்த பணத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறார். நெல்லை மாவட்டத்தில் பல பள்ளிகளுக்கு உதவி உள்ளார்.

தற்போது ஆரல்வாய்மொழி அருகே தோவாளை, வீரநாராயணமங்கலம், செண்பகராமன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்படும் வகையில் குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரங்கள் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தோவாளை அரசு தொடக்கப்பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் சந்திரபானுமதி தலைமை தாங்கினார். 3 பள்ளிகளுக்கும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை பாண்டி வழங்கினார்.

பாண்டியின் உயர்ந்த குணத்தை தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய-ஆசிரியைகள், மாணவர்கள் பாராட்டினர்.
Tags:    

Similar News