செய்திகள்
பொன் ராதாகிருஷ்ணன்

அமைச்சர் ஜெயக்குமாரின் சர்டிபிகேட் அவசியம் இல்லை- பொன். ராதாகிருஷ்ணன்

Published On 2020-01-23 09:33 GMT   |   Update On 2020-01-23 09:33 GMT
அமைச்சர் ஜெயக்குமார் தனக்கு சர்டிபிகேட் தர வேண்டிய அவசியமில்லை என்றும், கூட்டணி தர்மம் காரணமாக அமைதியாக இருப்பதாகவும் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில்:

முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வில்சன் கொலை வழக்கு தொடர்பாக இங்கு அனைத்து கட்சி கூட்டம் நடந்ததாக அறிந்தேன். அந்த கூட்டத்தில் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக எதுவும் பேசவில்லை. இதுபற்றி பேச இங்குள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு துணிச்சல் இல்லை.

அடுத்த இலக்கு அவர்களாக மாறி விடுவார்கள் என்ற அச்சம் இருக்கிறது. உயிர் மேல் அச்சம் உள்ளவர்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? இலங்கையில் உள்ள ஆலயத்தில் குண்டுவெடித்ததற்கு நாங்கள் கண்டனம் தெரிவித்தோம். ஆனால் நம் மாவட்டத்தில் குண்டுவெடித்தால் கூட இவர்கள் எதுவும் பேச மாட்டார்கள்.



பொன். ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சர்டிபிகேட் தர வேண்டிய அவசியமில்லை. எனது செயல்பாட்டை பற்றி முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா 2 முறை பேசி இருக்கிறார்.

கூட்டணி தர்மம் காரணமாகவே நான் அமைதியாக இருக்கிறேன். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மீது நான், மரியாதை வைத்திருக்கிறேன்.

ரஜினியை மையப்படுத்தினால்தான் அரசியல் செய்ய முடியும் என அனைத்து கட்சியினருக்கும் தெரியும். இப்போது நடக்கும் பிரச்சினையில் ரஜினி எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? அன்று அந்த நிகழ்ச்சியில் நானும் இருந்தேன். அவர் 2 பத்திரிகையை குறிப்பிட்டு சொன்னார். ஒரு பத்திரிகையை தி.மு.க.வினர் வைத்திருப்பார்கள் என்று கூறினார். அதை படிப்பவர்கள் முட்டாள் என கூறவில்லை.

துக்ளக் பத்திரிகையை வைத்திருப்பவர்கள் அறிவுஜீவிகள் என்றார். எல்லோரும் எல்லா பத்திரிகையையும் படிக்கிறார்கள். பெரியாரை பற்றி போகிற போக்கில் சொல்லிவிட்டு போனார். அதனை 50 ஆண்டுகளுக்கு பிறகு போஸ்ட்மார்டம் செய்கிறார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க.வினருக்கு இதை விட்டால் வேறு வேலை இல்லை. சத்தியமூர்த்தி பவனை எடுத்துப்போய் அறிவாலயத்திற்குள் வைக்கும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. அங்கு தினமும் சென்று மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென் பகுதியில் மணல் கடத்தலுக்கு யார் காரணம்? என்பது உலகிற்கே தெரியும். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் எந்த அரசியல்வாதி, எம்.எல்.ஏ. இருந்தார் என்பதும் தெரியும்.

பொதுவாழ்க்கையில் நான் எந்த தவறையும் செய்தது இல்லை. எனது சொத்து கணக்கை மட்டுமல்ல, குடும்ப உறுப்பினர்களின் சொத்து கணக்கையும் காட்ட தயாராக இருக்கிறேன். ஒரு அடி நிலமோ அல்லது வங்கியில் பணம் போட்டேன் என்றோ நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன்.

அதே நேரம் அப்பாவு எம்.எல்.ஏ. அவரது சொத்துக் கணக்கை வெளியிட தயாராக இருக்கிறாரா? என்பதை கூற வேண்டும்.

பா.ஜனதா கட்சிக்கு 21 மாநிலங்களில் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டு விட்டனர். தமிழகத்தில் பா.ஜனதா தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார். மண்டல, மாவட்ட, கிளை நிர்வாகிகள் தேர்வு முடிந்ததும், மாநில தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதற்கான கருத்து கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News