பெரியார் பற்றி ரஜினி சொன்னதில் உண்மை இல்லை- கி.வீரமணி பேட்டி
மதுரை:
மதுரை ஹார்விபட்டியைச் சேர்ந்த பெரியாரின் தீவிர பற்றாளர் ராமசாமி, உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது உடல் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக்தலைவர் வீரமணி பங்கேற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-
‘நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறோம். நீட் தேர்வால் தமிழகத்தில் 8 பேர் இறந்துள்ளனர். எனவே தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசின் கல்விக் கொள்கையை அதி விரைவாக நடைமுறைக்கு கொண்டு வந்து தமிழக அரசு ராஜ விசுவாசம் காட்டி வருகிறது. 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு, மாணவ-மாணவிகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே அதனை தமிழக அரசு கைவிட வேண்டும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பெரியார் குறித்து உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்துள்ளார். இதற்காக அவர் கோர்ட்டில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
மன்னிப்பு கேட்பது என்பது மனித பண்பாட்டின் பெருந்தன்மையான விஷயம்.
பெரியார் பற்றி ரஜினி குறிப்பிடும் போது, துக்ளக் பத்திரிகையை ஏன் காட்டவில்லை. இதில் இருந்தே அவர் சொன்ன தகவல் உண்மை இல்லை என தெரியவந்துள்ளது.
பெரியாரை கொச்சைப்படுத்திய ஆயிரமாயிரம் பேர் காணாமல் போய் விட்டனர். ஆனால் பெரியார் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.