செய்திகள்
எஸ்.ஐ. வில்சன் கொலை குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
எஸ்.ஐ. வில்சனை கொலை செய்த குற்றவாளிகள் அப்துல் சமீம் மற்றும் தவ்பீக்கை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் நாகர்கோவில், இளங்கடை பகுதியைச் சேர்ந்த தவ்பீக் (27), திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம் (29) ஆகிய இரு பயங்கரவாதிகளை கர்நாடக மாநிலம் உடுப்பியில் வைத்து அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்டு முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளை 28 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது பயங்கரவாதிகள் அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.