செய்திகள்
கார்த்தி சிதம்பரம், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய இடைக்கால தடை
வருமானவரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை அடுத்த முட்டுக்காட்டில் தங்களுக்கு சொந்தமாக இருந்த நிலத்தை விற்ற வருமானத்தை மறைத்ததாக கார்த்தி சிதம்பரம் மீது புகார் எழுப்பப்பட்டது.
ஒரு ஏக்கர் ரூபாய் 4 கோடி 25 லட்சம் என்ற விலையில் அக்னி எஸ்டேட் பவுன்டேசனுக்கு நிலத்தை கார்த்தி விற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விற்பனை ஒப்பந்தத்தில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலையை ரூபாய் 3 கோடி என்று குறிப்பிட்டு உள்ளதாக கார்த்தி மீது வருமான வரித்துறை புகார் தெரிவித்தது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவிற்காக அவர்களை இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதற்கு விலக்கு கேட்டும் கார்த்தி மற்றும் அவரது மனைவி இருவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி மீது சிறப்பு நீதிமன்றம் வரும் 27ம் தேதி வரை குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.