செய்திகள்
கைது

4 கிலோ தங்கம் கொள்ளையடித்த ஈரான் அகதிகள் 4 பேர் கைது

Published On 2020-01-18 09:57 GMT   |   Update On 2020-01-18 09:57 GMT
சென்னை சவுகார்பேட்டையில் போலீஸ் போல நடித்து 4 கிலோ தங்கம் கொள்ளையடித்த ஈரான் அகதிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் தினேஷ். நகை வியாபாரி. இவர் கடந்த 10-ந்தேதி சென்னை சவுகார்பேட்டை வீரப்பன் தெருவில் வினய் என்ற நகை வியாபாரியிடம் 4 கிலோ தங்க கட்டிகளை வாங்கினார். அதை ஒரு பையில் வைத்து ஆந்திரா செல்வதற்காக சவுகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது டிப்டாப் உடையணிந்த 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தினேசிடம் நாங்கள் டெல்லியை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். உங்களிடம் துப்பாக்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உங்கள் பையை சோதனை போட வேண்டும் என்றனர். தினேஷ் பையை காண்பித்தார்.

அவர்கள் பையில் இருந்த 4 கிலோ தங்க கட்டிகளையும் எடுத்துக் கொண்டு 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்று விட்டனர். தினேஷ் இதுபற்றி யானை கவுனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க பூக்கடை துணை கமி‌ஷனர் ராஜேந்திரன், உதவி கமி‌ஷனர் லட்சுமணன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் கொள்ளையர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கொள்ளை நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 மோட்டார் சைக்கிளின் எண்கள் பதிவாகி இருந்தன. கொள்ளையர்கள் அந்த வண்டிகளை கோயம்பேடு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு கோவா செல்லும் தனியார் பஸ்சில் ஏறி சென்றது தெரிய வந்தது. அந்த மோட்டார் சைக்கிள் எண்களை வைத்து விசாரித்த போது ஒரு மோட்டார் சைக்கிள் மகாராஷ்டிரா பதிவு எண் கொண்டது என்பதும், மற்றொரு மோட்டார் சைக்கிள் சென்னை செங்குன்றத்தில் திருடப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் கொள்ளையர்களை பிடிக்க கோவா விரைந்தனர். போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்த கொள்ளையர்கள் அங்கிருந்து ரெயில் மூலம் மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு சென்றனர். இதையறிந்த போலீசார் மத்திய பிரதேச மாநில ரெயில்வே போலீசாரின் உதவியை நாடினர்.

இந்த நிலையில் ரெயிலில் சென்ற கொள்ளையர்கள் மத்திய பிரதேச மாநிலம் போபாலை நெருங்கினர். அப்போது மத்திய பிரதேச மாநில ரெயில்வே போலீசார் கொள்ளையர்கள் 4 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்கள் 4 பேரும் சென்னை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் 4 பேரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்களது பெயர் அபுஹைதர் அலி (54), சாதிக், அசன்அலி, அலிஹாசன் என்று தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொள்ளையர்கள் 4 பேரும் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் அகதிகளாக தங்கியுள்ளனர். அவர்கள் குழுவாக பிரிந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி சென்று முக்கிய இடங்களில் நகை வியாபாரிகளிடம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. கொள்ளையர்களிடம் இருந்து மீதமுள்ள நகைகளை மீட்க போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News