கொடைக்கானலில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்த பள்ளி மாணவர்கள்
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்குட்பட்ட பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தொடர்ந்து பெய்த மழையினாலும் குண்டாறு குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கும் பணி காரணமாக தோட்டப்பட்ட சாலைகளாலும் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது.
இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மட்டுமின்றி நடந்து செல்பவர்கள்கூட தவறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். அதிகம் சேதம் அடைந்த சாலைகளான நாயுடுபுரம், தைக்கால்மண் சாலை, ஐயர் கிணறு, ஆனந்தகிரி, உகார்த்தேநகர், ரைபிள் ரேஞ்ச் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மிகுந்த மோசமாக உள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.
இதனால் சேதம் அடைந்த சாலைகளை அந்தந்தபகுதி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விடுமுறையில் வீட்டில் உள்ள தங்கள் தெருவில் சேதம் அடைந்த சாலையினை மண்வெட்டி மற்றும் கடப்பாறை கொண்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் தினந்தோறும் பள்ளிக்கு அவசரமாக செல்லும்போது குண்டும் குழியுமாக உள்ள சாலையில் விழுந்து காயம் பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் உள்ள சாலையை தற்காலிகமாக நாங்களே சரிசெய்து வருகிறோம். நிரந்தரமாக சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.