செய்திகள்
பொங்கல் விழாவில் எடப்பாடி பழனிசாமி பசுமாட்டிற்கு பழங்கள் வழங்கினார்

சொந்த கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published On 2020-01-16 07:28 GMT   |   Update On 2020-01-16 07:28 GMT
சொந்த கிராமத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடியதால் அவரது சொந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
எடப்பாடி:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த 14-ந் தேதி சேலத்திற்கு வந்தார். அன்று மதியம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நேற்று காலை எடப்பாடி அருகே உள்ள தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஊர் மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுமக்களின் வரவேற்பை ஏற்ற எடப்பாடி பழனிசாமி அப்பகுதியில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.

பின்னர் கோவில் மைதானத்தில் புதுப்பானையில் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கிய நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் பொங்கலோ, பொங்கல் என கூறி, பொங்கல் பானைக்கு மாலை அணிவித்து, வாழைப்பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட மங்கல பொருட்களை வைத்து பொங்கல் பானையினை வணங்கினர்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மனைவி ராதாவுடன் சேர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு, சர்க்கரை பொங்கல் வழங்கினார். பின்னர் கோவில் மைதானத்தில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, பூக்களால் நிரப்பப்பட்ட உறி பானையினை, கம்பால் அடித்து உடைத்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆர்வமிகுதியால் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தனது தோட்டத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட மாடுகளை வணங்கிய எடப்பாடி பழனிசாமி மாடுகளுக்கு மாலை அணிவித்து பழம், வெல்லம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை கொடுத்து வணங்கினார்.

பொங்கல் விழாவினை ஒட்டி, கிராம மக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிலம்பாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கிராமியக்கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த எடப்பாடி பழனிசாமி, ஊர்மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். ஊர் மக்களுடன் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடியதால் அவரது சொந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் தனது தாயார் தவசாயி அம்மாளிடம் ஆசிபெற்ற முதல்வர் அங்கிருந்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு திரும்பினார். சிலுவம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமியுடன் அவரது மனைவி ராதா, மகன் மிதுன்குமார், சகோதரர் கோவிந்தன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


Tags:    

Similar News