செய்திகள்
வேல்முருகன்

மாணவர்கள் மீது பா.ஜ.க. வன்முறை வெறியாட்டம்- வேல்முருகன் குற்றச்சாட்டு

Published On 2020-01-07 09:16 GMT   |   Update On 2020-01-07 09:16 GMT
இந்தியாவில் மதத்தின் பெயரால் கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயல்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
திண்டுக்கல்:

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, மாணவர்கள் கற்களை வீசினால் நாங்கள் குண்டுகளை வீசுவோம் என அறிவித்துள்ளார். இதன் மூலம் மதவெறியை தூண்டி கல்லூரிக்குள் புகுந்து மாணவர்கள் மீது உருட்டுக்கட்டை, பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கி கலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்தியாவில் மதத்தின் பெயரால் கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயல்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற கருத்துகளை தெரிவிக்கும் எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை? நெல்லை கண்ணணுக்கு ஒரு சட்டம், எச்.ராஜாவுக்கு ஒரு சட்டமா? அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் தற்போது வன்முறை களமாக மாறி வருகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழக அரசு சொல்கிற நபர்களைத்தான் வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என மிரட்டி வருகின்றனர். அவ்வாறு செயல்படாத அதிகாரிகளை ஒருமையில் பேசி அவர்களது பணிக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர். இதற்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியமே இல்லை. அ.தி.மு.க. அரசு தங்களுக்கு தேவையானவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவித்து இருக்கலாம்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. மத்திய அரசு கூறுவது போல் 3 தலைமுறைக்கு 21 ஆவணங்களை எவ்வாறு தாக்கல் செய்ய முடியும்? அவர்கள் கூற்றுப்படியே வைத்துக் கொண்டால் அத்வானியை பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவார்களா? அல்லது மு‌ஷரப்பை இந்தியாவுக்கு கொண்டு வந்து விடுவார்களா? எந்த வித ஆவணங்களும் இல்லாமல் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்கள் எதனை சமர்ப்பிக்க முடியும்? எனவே இந்த சட்டம் நாட்டு மக்களை அச்சுறுத்தும் ஆபத்தான சட்டமாகும். மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல் தேவையற்ற சட்டங்களை இயற்றி மத்திய- மாநில அரசுகள் மிரட்டி வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News