உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நல்ல அங்கீகாரம் வழங்கியுள்ளனர்- கடம்பூர் ராஜூ பேச்சு
திருச்சி:
திருச்சி தென்னூர் பட்டாபிராமன் சாலை அருகில் உள்ள பொருட்காட்சி மைதானம், அண்ணா கலையரங்கில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்தார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி சிறப்புரையாற்றினார்.
விழாவில் அரசின் சாதனைகளை விளக்கியும், திட்டங்கள் பற்றியும் வைக்கப்பட்டுள்ள 27 ஸ்டால்களை தமிழக செய்தி மக்கள் தொடர் புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து பேசியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் அரசின் செயல்பாட்டுக்கு மக்கள் நல்ல அங்கீகாரம் வழங்கியுள்ளனர். தமிழக அரசு சிறப்பான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடியும் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். இதற்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்தியாவிலேயே சிறந்த நிர்வாகம் வழங்கியதில் தமிழகம் முதன்மை இடத்தை பிடித்துள்ளது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் இருந்த போதும் தமிழகம் சிறப்பான நிர்வாகத்தால் இந்த பெயரை பெற்றிருக்கிறது. இது தமிழக மக்களுக்கும் கிடைத்த பெருமை.
ஜெயலலிதா திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்று தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை வழங்கினார். அதே வழியில் முதல்வர் பழனிச்சாமி அரசும் திருச்சிக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது என்றார்.