செய்திகள்
வைகோ

நெல்லை கண்ணன் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

Published On 2020-01-02 08:36 GMT   |   Update On 2020-01-02 08:36 GMT
நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், அவர் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் தான் பேசினார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி உள்ளார்.
நெல்லை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தற்போது கோலம் வடிவில் மாறியுள்ளது. கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்கள் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்கின்றனர்.

மேலப்பாளையத்தில் பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. அவர் எப்போதும் நகைச்சுவையுடன் பேசக்கூடியவர். அவர் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் தான் பேசினார். ஆனால் அதை பெரிதுபடுத்திவிட்டனர். எனவே நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.



அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்துகின்றனர். இது பா.ஜ.க.வினர் மனசாட்சி இல்லாதவர்கள் என்பதை காட்டுகிறது. இதன் மூலம் இங்கு பாசிச ஆட்சி நடைபெறுவது தெரிகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகே அது பற்றி கருத்து கூறமுடியும். இந்தியாவில் ஒற்றுமை, பன்முக தன்மையை சிதைத்து இஸ்லாமியர்களை வெளியேற்றும் நடவடிக்கை நடந்து வருகிறது. பொது சிவில் சட்டத்தை இவர்கள் நிறைவேற்ற நினைக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News