செய்திகள்
முகாமில் ஒரு யானைக்கு புட் பாத் சிகிச்சை அளிக்கப்பட்டது

நலவாழ்வு முகாமில் பாத வெடிப்பு உள்ள யானைகளுக்கு ‘புட் பாத்’ சிகிச்சை

Published On 2019-12-24 09:40 GMT   |   Update On 2019-12-24 09:40 GMT
யானைகள் நலவாழ்வு முகாமில் தனி கால்நடை மருத்துவக்குழுக்கள் பாத வெடிப்பு மற்றும் கால் நக காயங்களால் அவதியுறும் யானைகளை கண்டறிந்து அவற்றுக்கு “புட் பாத்” என்ற சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 48 நாட்கள் நடைபெறும் யானைகள் நல வாழ்வு முகாம் கடந்த 15-ந் தேதி முதல் தொடங்கியது.

இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 28 யானைகள் கலந்து கொண்டுள்ளன. இந்த யானைகளுக்கு சத்தான உணவு வகைகள் வழங்கப்படுகிறது.

யானைகள் புத்துணர்ச்சிக்காக காலை மற்றும் மாலையில் நடைபயிற்சியும், அவைகள் குளிப்பதற்கு என சவர் மற்றும் குளியல் மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதில் யானைகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றன.

யானைகளின் உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம் நடைபெறும் நாட்களில் இங்குள்ள யானைகளின் உடல் சார்ந்த பிரச்சனைகள் கண்டறியப்பட்டு அதற்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

பிரமாண்டமான உருவத்தில் உள்ள யானைகளுக்கு அதன் கால்கள் மிக முக்கியமானவை.

யானைகளின் கனத்த உருவத்தை தாங்கி நிற்கும் அதன் கால்களில் ஏதேனும் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் அவை முடங்கிவிடும்.

குறிப்பாக அதன் பாதங்களில் ஏற்படும் வெடிப்புகள், கொப்பளங்கள், சிறு காயங்கள் போன்றவை யானைகளை பெரிதும் வேதனைப்படுத்தும்.

இதுபோன்ற சமயங்களில் யானைகளால் நிற்கவோ, நடக்கவோ முடியாது. எனவே இந்த நலவாழ்வு முகாமில் உள்ள யானைகளின் பாதப் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

முகாமிற்கென்று அமைக்கப்பட்டுள்ள தனி கால்நடை மருத்துவக்குழுக்கள் பாதப்பகுதி தளர்ந்துபோன வயதான யானைகள் மற்றும் பாத வெடிப்பு மற்றும் கால் நக காயங்களால் அவதியுறும் யானைகளை கண்டறிந்து அவற்றுக்கு “புட் பாத்” என்ற சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பெரிய பாத்திரத்தில் கரைக்கப்பட்ட மருந்து கரைசலை ஊற்றி, பாகன்களின் உதவியோடு அதனுள் யானையின் கால்களை வைக்க வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருந்து கரைசலில் யானையின் கால்கள் ஊறிய பின்னர் பாதங்களில் ஏற்பட்டுள்ள காயங்களின் தீவிரத்தை பொறுத்து பிற சிகிச்சை முறைகள் தொடர்கின்றன.

வனங்களில் மண் தரையில் நடந்து வாழும் உயிரினமான யானைகள், கோவில்களில் வளர்க்கப்படுவதால் இவை பெரும்பாலும் அங்குள்ள சிமெண்ட் தரையில் நிற்க வைக்கப்பட்டு வருகின்றன. இயல்பை மீறி இவை தார் சாலைகளிலும் நடக்க வைக்கப்டுகின்றன.

இதனால் ஏற்படும் உபாதைகளே யானைகளுக்கு ஏற்படும் பாத நோய்கள். எனவே முகாமில் உள்ள கோவில் யானைகளுக்கு ஒவ்வாமையால் ஏற்படும் பாத வெடிப்புகளை தனி மருத்துவக்குழுவினர் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News