செய்திகள்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
1.10-.2019 முதல் 23-12-2019 வரை சென்னையில் வடகிழக்கு பருவமழையானது இயல்பு அளவைவிட 17 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இதேபோல் புதுச்சேரியில் 33 சதவீதம், பெரம்பலுரில் 28 சதவீதம், வேலூரில் 26 சதவீதம் குறைவாக மழை பதிவாகி உள்ளது. நீலகிரியில் இயல்பு அளவைவிட 68 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.