செய்திகள்
நோட்டா

உள்ளாட்சி தேர்தலில் நோட்டா சின்னத்துக்கு வாய்ப்பில்லை - தேர்தல் ஆணையம் தகவல்

Published On 2019-12-21 04:05 GMT   |   Update On 2019-12-21 04:05 GMT
“இந்த உள்ளாட்சி தேர்தலில் நோட்டா சி்ன்னத்துக்கு வாய்ப்பில்லை” என மதுரை ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மதுரை:

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா லட்சுமிபுரத்தை சேர்ந்த வினோத், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 2-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானது. ஊராட்சி பதவிகளுக்கான இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் ‘நோட்டா’ சின்னத்துக்கு வாக்களிக்கும்படி ஏற்பாடு செய்யப்படவில்லை. ஒவ்வொரு பதவியிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க சிலர் விரும்பமாட்டார்கள். அவர்கள் நோட்டாவை தேர்ந்தெடுத்து வாக்களிக்கவே விரும்புவார்கள்.

எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தல்களில் நோட்டாவை தேர்வு செய்து வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை. இதன்மூலம் மக்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

எனவே உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவை தேர்ந்தெடுத்து வாக்களிக்கும் உரிமையை வழங்கும்படி கடந்த 9-ந்தேதி மாநில தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே எனது மனு அடிப்படையில் வருகிற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் நோட்டாவை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.



அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் ராஜாகார்த்திகேயன், “தமிழகத்தின் ஊரக பகுதிகளில் வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்வது, பரிசீலனை நடவடிக்கை, சின்னங்கள் ஒதுக்கீடு ஆகிய பணிகள் நிறைவடைந்துவிட்டன. தேர்தல் நடவடிக்கைகளில் பெரும்பகுதி முடிந்துவிட்டது. எனவே இந்த தேர்தலில் நோட்டா சின்னத்துக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்வதற்கு வாய்ப்பில்லை” என்றார்.

இதையடுத்து மனுதாரர் வக்கீல் ஆஜராகி, அடுத்து வரும் தேர்தலில் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும், என்றார்.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்த பதில் மனுவை மாநில தேர்தல் ஆணையம் 8 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News