செய்திகள்
வெடிகுண்டு வீசப்பட்ட மதுக்கடை

வாங்கிய மதுவுக்கு பணம் கேட்டதால் மதுக்கடை மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

Published On 2019-12-16 12:09 GMT   |   Update On 2019-12-16 12:09 GMT
திருபுவனை அருகே வாங்கிய மதுவுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் மதுக்கடை மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருபுவனை:

திருபுவனை அருகே திருவாண்டார்கோவிலில் இருந்து கொத்தபுரிநத்தம் செல்லும் சாலையில் தனியார் மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் சேதராப்பட்டை சேர்ந்த பாஸ்கர் (வயது42) என்பவர் கேஷியராக உள்ளார்.

நேற்று இரவு 9 மணியளவில் இந்த மதுபான கடைக்கு 25 வயது மதிக்கதக்க 3 வாலிபர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மதுக்கடை கேஷியரிடம் 3 பீர்பாட்டில்கள் கேட்டனர். அதன்படி மதுக்கடை கேஷியர் பாஸ்கர் 3 பீர் பாட்டில்களை கொடுத்து விட்டு அவர்களிடம் பணம் கேட்டார்.

அதற்கு அந்த வாலிபர்கள் எங்களிடமே பணம் கேட்கிறாயா? எங்களிடம் பணம் இல்லை. வெடிகுண்டுகள்தான் இருக்கிறது. வெடிகுண்டு வேண்டுமா என்று கேட்டபடி மறைத்து வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து மதுக்கடை மீது வீசினர்.

இதில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டுகள் வெடித்தன. உடனே வெடிகுண்டு வீசிய வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். அப்போது அருகில் யாரும் இல்லாததால் ஏதும் உயிர்சேதம் ஏற்படவில்லை. அதே வேளையில் வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டதும் மதுக்கடையில் அமர்ந்து மதுகுடித்து கொண்டிருந்தவர்களும் , மதுபாட்டில்கள் வாங்க வந்தவர்களும் அலறியடித்து கொண்டு ஓடினர். வெடிகுண்டு வீசியதில் மதுக்கடை முன்பகுதி மட்டும் சேதமானது.

இதுகுறித்து மதுக்கடை கேஷியர் பாஸ்கர் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து வெடிகுண்டுகளை வீசிய வாலிபர்கள் யார்-யார், எந்த ஊர் என்பது குறித்து மதுக்கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர்.

இதில் வெடிகுண்டு வீசிய 3 ரவுடிகளின் அடையாளங்கள் சிசி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்ததையடுத்து அவர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து வெடிகுண்டு வீசிய 3 பேரும் போலீசாரின் பிடியில் சிக்கி உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுவையில் சமீபகாலமாக வெடிகுண்டுகளை வீசி கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பழிக்கு பழியாக கொலை செய்ய ரவுடிகள் வெடிகுண்டுகளை சர்வ சாதாரணமாக பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் வாணரப்பேட்டையை சேர்ந்த ரவுடி சாணிக்குமார், அரியாங்குப்பத்தை சேர்ந்த ஜிம் பாண்டியன், முத்தியால்பேட்டையை சேர்ந்த அன்புரஜினி ஆகிய 2 ரவுடிகள் வெடி குண்டுவீசி கொல்லப்பட்டனர்.

மேலும் திருபுவனை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஜெனா மற்றும் அவரது கூட்டாளிகள் கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த போது அவர்களை பிடிக்க முயன்ற போலீசார் நாட்டு வெடி குண்டு மற்றும் துப்பாக்கியை காட்டி ரவுடி ஜெனா மற்றும் அவரது கூட்டாளிகள் மிரட்டல் விடுத்தனர். இப்படி போலீசாரையே வெடிகுண்டை காட்டி ரவுடிகளை மிரட்டுவதால் பொதுமகக்ளுக்கு பாதுகாப்பு இருக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News