செய்திகள்
சிறுவன் ஆகாஷ்

கும்பகோணம் அருகே உணவை சாப்பிட்ட சிறுவன் திடீர் பலி: தந்தை-தம்பிக்கு தொடர்ந்து சிகிச்சை

Published On 2019-12-15 13:58 GMT   |   Update On 2019-12-15 13:58 GMT
கும்பகோணம் அருகே தாய் சமைத்த உணவை சாப்பிட்ட சிறுவன் திடீரென பலியானான். தந்தை-தம்பி இருவரும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் அருகே வேலூர் பகுதியில் சுமார் 20 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள காட்டு வழியில் பவர் பிளாட் அமைக்கப்பட்டதால் அங்கிருந்து அவர்கள் இப்பகுதிக்கு குடியேற்றப்பட்டனர். இப்பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் பகுதியில் வசித்து வரும் சக்திவேல் மனைவி ஜெயந்தி நேற்று காலை வீட்டில் சமையல் செய்து வைத்துவிட்டு ஆடுகளை மேய்க்க சென்று விட்டாராம். பின்னர் அவரது கணவர் சக்திவேல், குழந்தைகள் ஆகாஷ் (வயது 14), அபினாஷ் (12) ஆகிய 3 பேரும் ஜெயந்தி சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து மதியத்திற்கு மேல் 3 பேருக்கு கடும் வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ளவர்கள் குழந்தைகள் உள்பட 3 பேரையும் குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

இதில் ஆகாசின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டார். மற்ற 2 பேரும் குத்தாலம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று காலை சிறுவன் ஆகாஷ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தான். இதையடுத்து சிறுவன் அபினாசை திருப்பனந்தாளில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறுவன் ஆகாஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். வீட்டில் சமையல் செய்த உணவில் வி‌ஷப்பூச்சி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை அறியாமல் சாப்பிட்ட 3 பேரும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சுகாதார அலுவலர்கள் அப்பகுதிக்கு சென்று உணவில் ஏதும் கலந்துள்ளதா? என ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News