செய்திகள்
கைது

மதுரவாயலில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை- நண்பர் கைது

Published On 2019-12-15 09:14 GMT   |   Update On 2019-12-15 09:14 GMT
மதுரவாயலில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

போரூர்:

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளி (வயது 24) .

இவர் நண்பர்கள் சிம்சன், சுப்பிரமணி, அரவிந்தன் ஆகிய 3 பேருடன் மதுரவாயல் அய்யப்பா நகர் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் தங்கி “டைல்ஸ்” ஒட்டும் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 12-ந் தேதி அறையில் இருந்த முரளியின் மணி பர்ஸ் மாயமானது. அதில் ரூ.1,500 மற்றும் ஏ.டி.எம். கார்டு இருந்தது.

இதுகுறித்து முரளி சிம்சனிடம் கேட்டார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடன் இருந்த மற்ற நண்பர்கள் சுப்பிரமணி, அரவிந்த் ஆகியோர் அவர்களை சமாதானம் செய்தனர்.

நேற்று இரவு மது போதையில் இருந்த முரளி மீண்டும் சிம்சனிடம் மணி பர்ஸ் தொடர்பாக தகராறில் ஈடுபட்டார். பின்னர் முரளி தூங்க சென்று விட்டார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த சிம்சன் நண்பர் முரளியை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். தூங்காமல் கண் விழித்துக் கொண்டே இருந்த சிம்சன் அதிகாலை 3 மணி அளவில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த முரளியின் தலையில் கல்லை தூக்கி போட்டார்.

இதில் தலை நசுங்கிய முரளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து சிம்சன் தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

முரளியுடன் தங்கியிருந்த சுப்பிரமணி, அரவிந்த் ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பஸ்சில் தப்பிச் சென்ற சிம்சனை பண்ருட்டி அருகே போலீசார் கைது செய்தனர்.அவரை சென்னைக்குஅழைத்து வந்து கொண்டு இருக்கிறார்கள்.

அவரிடம் விசாரணை நடத்திய பின்னரே கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும்.

Tags:    

Similar News