ராமநாதபுரம் அருகே ஜவுளி கடை அதிபர் வீட்டில் 126 பவுன் நகை கொள்ளை
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள ஆற்றாங்கரை முகமதியார் தெருவைச் சேர்ந்தவர் குத்புதீன் (வயது 46). இவர், ராமநாதபுரம் நகரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 12-ந் தேதி வீட்டின் பீரோவை குத்புதீன் திறந்து பார்த்தார். அப்போது அங்கிருந்த 126 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குத்புதீன் மற்றும் குடும்பத்தினர் வீடு முழுவதும் நகையை தேடி பார்த்தனர். நகைகள் எதுவும் அங்கு இல்லை.
இதையடுத்து உச்சிப்புளி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் வழக்குப்பதிவு செய்து குத்புதீன் வீட்டில் ஆய்வு செய்தனர்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் புகுந்து நகையை கொள்ளையடித்து சென்றார்களா? அல்லது வீட்டுக்கு வந்து சென்ற நபர்கள் நகையை திருடிச் சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
126 பவுன் நகை திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.