செய்திகள்
கைதான கிறிஸ்டோபர்

திருச்சி மெக்கானிக்குடன் பள்ளி-கல்லூரி மாணவர்கள் தொடர்பு: கைது செய்ய நடவடிக்கை

Published On 2019-12-14 08:01 GMT   |   Update On 2019-12-14 08:01 GMT
திருச்சி மெக்கானிக் மீது பாலக்கரை போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார்கள் உள்ளன. அவருடன் பள்ளி, கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் தொடர்பில் இருந்துள்ளது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி:

திருச்சியில் குழந்தைகள் மற்றும் சிறுமிகளுடன் காமுகர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் ஆபாச படங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பிறரின் செல்போன்களுக்கு அனுப்பியதாக காஜாபேட்டை புதுத்தெருவை சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் கிறிஸ்டோபர் (வயது 42) என்பவரை அனைத்து மகளிர் போலீசார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.

தமிழகத்தில் முதல் முறையாக சிறுமிகள் ஆபாச படம் பகிர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் நபரான கிறிஸ்டோபர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி கிறிஸ்டோபருடன் 150 பேர் வரை ஆபாச படங்களை செல்போன், பேஸ்புக், வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் பெயர்கள், விவரங்கள் கிறிஸ்டோபரின் செல்போன்களில் உள்ளது.

அதை கண்டுபிடிப்பதற்காக அவரது நிலவன் - நிலவன் என்ற இணையதள முகவரியின் ஐ.பி. விவரத்தை திரட்ட போலீசார் கிறிஸ்டோபரின் செல்போனை சென்னை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கிறிஸ்டோபருடன் தொடர்பில் இருந்த 150 பேரில் பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் விவரத்தை போலீசார் திரட்டி விசாரிக்க உள்ளனர். அவர்களும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த வழக்கில் முதல் ஆளாக கைதான கிறிஸ்டோபர் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் கூறப்படுகிறது.

ஏ.சி. மெக்கானிக்கான கிறிஸ்டோபர் அரசியல் பணிகளில் ஆர்வம் கொண்டவர் . கடந்த 10 ஆண்டு முன்பு வரை அரசியலில் ஈடுபட்டார். அவரது கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும். இதனால் அரசியல் கட்சிகளுக்கு சுவர் விளம்பரம் எழுதுவது, நோட்டீஸ்கள் தயாரிப்பது என இருந்து வந்தார்.

அதன் பிறகு ஒரு கவுன்சிலரிடம் உதவியாளராக இருந்து வந்தார். பிறப்பு- இறப்பு சான்றிதழ் வாங்கி கொடுப்பது, ரேசன் கார்டு, அரசு உதவி பணம் பெற்று தருவது என சமூக பணிகளில் பொதுமக்களுக்கு உதவியாக இருந்தார்.

மேலும் தனது மெக்கானிக் படிப்பை வைத்து அரசு வேலைக்கும் முயற்சி செய்து வந்தார். ஆனால் அரசுவேலை கிடைக்கவில்லை. இதனால் 10 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டு மனைவியுடன் நாகர்கோவிலில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் குழந்தைகள் இல்லாததால் மீண்டும் திருச்சிக்கு வந்த அவர் திடீரென மனதை வேறுபக்கம் திருப்பியுள்ளார் . கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்த ஆபாச இணையதளத்தை பார்க்க தொடங்கியுள்ளார். நாளடைவில் அதற்கு அடிமையாகியுள்ளார்.

இந்த நிலையில் சிறுமிகளை வைத்து ஆபாச படங்களை தயாரித்து இணைய தளங்களில் உலா வருவதை பார்த்து அதில் மூழ்கி விட்டார். அதோடு அவரே இதற்காக தனியாக ஒரு பேஸ்புக் கணக்கை போலி பெயரில் தொடங்கியுள்ளார். அந்த பகுதி மாணவர்கள், சிறுவர்களுக்கு இதை பரப்பவும் செய்து உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஜாபேட்டை பகுதியில் செல்போனில் ஆபாச படம் பார்க்கும் தகராறில் பள்ளி மாணவருக்கு பிளேடால் காயம் ஏற்பட்டது. இதில் கிறிஸ்டோபரின் நண்பர்களும் இருந்தனர்.

அதோடு கிறிஸ்டோபர் மீது ஏற்கனவே பாலக்கரை போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார்களும் உள்ளன. சில வழக்குகளிலும் அவர் தொடர்பில் இருந்துள்ளார்.

கிறிஸ்டோபருடன் பள்ளி, கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் தொடர்பில் இருந்துள்ளது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரிப்பதால் மாணவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கிறிஸ்டோபரின் அழகான கையெழுத்து அரசியலில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதன் பிறகு வாழ்வில் ஏற்பட்ட காயம் அவரை பாலியல் வழக்கில் சிக்கும் அளவிற்கு கொண்டு போய் விட்டது. கிறிஸ்டோபர் மீதான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Tags:    

Similar News