செய்திகள்
மஞ்சள் கொத்து

அறுவடைக்கு தயார்நிலையில் மஞ்சள் கொத்து - நல்ல விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2019-12-14 04:03 GMT   |   Update On 2019-12-14 04:03 GMT
திருக்காட்டுப்பள்ளி அருகே அறுவடைக்கு தயார்நிலையில் மஞ்சள் கொத்துக்கள் உள்ளன. நல்ல விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி:

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகையில் முக்கிய இடத்தை பிடிப்பது கரும்பு மற்றும் மஞ்சள் ஆகும். பொங்கல் பண்டிகையன்று புதுப்பானையில் மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துக்கள் கட்டி அலங்காரம் செய்து, புதிய அரிசியால் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக கரும்பு மற்றும் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபடுவார்கள். காவிரி பாயும் தஞ்சை மாவட்டமான திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நடுப்படுகை, படுகை, வளப்பக்குடி, நேமம் ஆகிய பகுதிகளில் பரவலாக மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யும் வகையில் ஜூலை மாதம் மஞ்சள் விதைக்கப்படுகிறது. இந்த மஞ்சள் ஜனவரி மாதம் பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறுவடை செய்யப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, வெல்லம், மஞ்சள், இஞ்சி ஆகியவை முக்கிய இடம் பெறுகிறது. திருக்காட்டுப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனை செய்யும் வகையில் கரும்பு மற்றும் மஞ்சள் சாகுபடி செய்துள்ளோம்.

தற்போது மஞ்சள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. சென்ற ஆண்டை போல இந்த ஆண்டும் மஞ்சள் நல்ல விளைச்சல் இருக்கிறது. இதனால் நாங்கள் மகிழ்ச்சியில் உள்ளோம்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெய்த மழையினால் மஞ்சள் பயிரில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இங்கு அறுவடையாகும் மஞ்சள் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சாவூர், பூதலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கரும்பினை போல நிறைய ஏக்கரில் சாகுபடி செய்யாவிட்டாலும் குறைந்த அளவில் கண்டிப்பாக ஆண்டுதோறும் மஞ்சளை நாங்கள் சாகுபடி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News