செய்திகள்
கோப்பு படம்

கும்பகோணம் அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள்-கார் பறிமுதல்

Published On 2019-12-10 11:05 GMT   |   Update On 2019-12-10 11:05 GMT
கும்பகோணம் அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் மறித்துள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.

இதையடுத்து திருப்பனந்தாள் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், பந்தநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் சுகுணாவிற்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பந்தநல்லூரில் இருந்து போலீசாருடன் திருப்பனந்தாள் நோக்கி வேகமாக வந்தார். நெய்குப்பம் என்ற இடம் அருகே திருப்பனந்தாள் போலீசார் தெரிவித்த கார் வந்துகொண்டிருந்தது.

அதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் சுகுணா அதனை மறித்து போலீஸ் ஜீப்பை நிறுத்தினார். இதையடுத்து அந்த காரின் டிரைவர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்த போது அதில் புதுச்சேரியில் இருந்து 2112 மதுபாட்டில்கள் கடத்திவரப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து கவால்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News