செய்திகள்
நாகர்கோவிலில் பிளஸ்-2 மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம்- பொதுமக்கள் தர்மஅடி
நாகர்கோவிலில் பள்ளி வகுப்பறையில் பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு அரசு மேல் நிலைப்பள்ளியில் விடுமுறை தினமான நேற்று பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடந்தது. சிறப்பு வகுப்புகள் முடிந்ததும் மாணவ- மாணவிகள் அனைவரும் வகுப்பறையில் இருந்து வீடுகளுக்கு புறப்பட்டனர். அதன்பிறகு ஆசிரியர்களும் கிளம்பிச் சென்றனர்.
அனைத்து ஆசிரியர்களும், மாணவ- மாணவிகளும் பள்ளியை விட்டு சென்ற பின்பு பள்ளி அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் பள்ளி அருகே சென்றனர். அப்போது பள்ளியின் ஒரு வகுப்பறையில் லேசான சத்தம் வருவதை கேட்டனர்.
சத்தம் வந்த வகுப்பறைக்கு அப்பகுதி மக்கள் சென்று பார்த்தனர். அங்கு ஆசிரியர் ஒருவர் பிளஸ்-2 மாணவி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை கண்டனர். அதிர்ந்து போன அவர்கள் அந்த ஆசிரியரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் ஆசிரியரை வகுப்பறைக்கு வெளியே அழைத்து வந்து தர்ம அடி கொடுத்தனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.
சம்பவத்தை கண்ட சிலர் கோட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், பள்ளிக்கு விரைந்து சென்றனர். பொதுமக்கள் பிடியில் இருந்த ஆசிரியரை விடுவித்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதற்காக அவரை போலீசார் மோட்டார் சைக்கிளில் ஏற்றிய போது, கூடி நின்ற வாலிபர்கள் ஆசிரியரை மீண்டும் சரமாரியாக தாக்கினர்.
இந்த காட்சிகளையும், சம்பவத்தையும் அங்கு நின்ற சிலர் செல்போனில் படம் பிடித்தனர். அதனை சமூக ஊடகங்களிலும் வெளியிட்டனர். இன்று அந்த காட்சிகள் வாட்ஸ்-அப்பில் வைரலானது. இது கல்வித்துறை அதிகாரிகளின் பார்வைக்கும் சென்றது. சம்பவம் குறித்து அவர்களும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.