செய்திகள்
கோப்புப்படம்

முன்னாள் காதலி திருமணத்தை தடுத்து நிறுத்திய தொழிலாளி

Published On 2019-12-06 09:33 GMT   |   Update On 2019-12-06 09:33 GMT
நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை அனுப்பி முன்னாள் காதலி திருமணத்தை தடுத்து நிறுத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள சின்னதப்பை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் ராம்ராஜ் (வயது 27). தையல் தொழிலாளி.

ராம்ராஜும், மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளிச் சந்தை அருகே தனியார் பால் நிறுவனத்தில் ஊழியர்களாக பணிபுரிந்தனர். அப்போது இருவரும் காதலித்தனர். 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் காதலியை கைவிட்டு ராம்ராஜ் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதன்பின்னர் ராம்ராஜின் முன்னாள் காதலி தனக்கு பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் திருமணம் செய்ய சம்மதித்தார். இதையடுத்து அவருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வெள்ளிசந்தை வெங்கடாசலபதி கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.

ராம்ராஜ் தன்னுடைய முன்னாள் காதலி மணக்க இருந்த மாப்பிள்ளையின் செல்போனுக்கு போட்டோக்கள், வீடியோக்களை அனுப்பி உள்ளார். அதில், முன்னாள் காதலியும், ராம்ராஜூம் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள், வீடியோக்கள் இடம்பெற்று இருந்தன.

இதனை பார்த்த மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்தார். மாப்பிள்ளை வீட்டினரும் திடுக்கிட்டனர். இதையடுத்து இன்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் மகேந்திரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராம்ராஜை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 294-பி (திட்டுதல்), 506 (1)-(கொலை மிரட்டல் விடுத்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவரிடமிருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் ராம்ராஜை பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

கைதான ராம்ராஜ் கொடுத்த பரபரப்பு வாக்குமூலத்தில் முன்னாள் காதலி கைவிட்ட ஆத்திரத்தில் இப்படி செய்துவிட்டதாக கூறினார். நான் திருமணம் செய்து கொண்டாலும் முன்னாள் காதலியை மறக்க முடியாமல் தவித்தேன். இதனால் எனது வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்றும் இந்த நிலையில் முன்னாள் காதலிக்கு திருமணம் நடக்க இருந்ததால் அவளும் நிம்மதியாக வாழக்கூடாது என்று நினைத்து அவளது மாப்பிள்ளைக்கு நான் பழைய காதலியுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட படங்களை அனுப்பி வைத்து திருமணத்தை நிறுத்திவிட்டேன் என்றும் போலீசாரிடம் அழுதுபுலம்பினார்.
Tags:    

Similar News