செய்திகள்
மகா தீபம்

மகா தீப விழாவையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

Published On 2019-12-04 07:37 GMT   |   Update On 2019-12-04 07:37 GMT
மகா தீப விழாவையொட்டி திருவண்ணாமலைக்கு வேலூர், விழுப்புரம், கடலூரில் இருந்து 9, 10, 11 மற்றும் 12-ம் தேதிகளில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடந்து வருகிறது. 10-ந்தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயர உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

மகா தீபத்தை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்காக பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள்.

இதையொட்டி திருவண்ணாமலைக்கு வேலூர், விழுப்புரம், கடலூரில் இருந்து 9, 10, 11 மற்றும் 12-ம் தேதிகளில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 10 மற்றும் 11-ம்தேதி காலை 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம் மற்றும் தண்டரை ரெயில் நிலையங்கள் வழியாக திருவண்ணாமலைக்கு முற்பகல் 11 மணிக்கு வந்தடையும்.

பின்னர், திருவண்ணாமலையில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரெயில், இதே வழித்தடம் வழியாகவே மீண்டும் விழுப்புரத்திற்கு மதியம் 3 மணிக்கு சென்றடையும்.

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து 9, 10 மற்றும் 11-ம்தேதி இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் திருவண்ணாமலைக்கு இரவு 11.30 மணிக்கு வந்தடைகிறது.

திருவண்ணாமலையில் இருந்து 10, 11 மற்றும் 12-ம்தேதி அதிகாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாகவே மீண்டும் விழுப்புரத்துக்கு அதிகாலை 5 மணிக்கு சென்றடைகிறது.

கடலூர் திருப்பாதி புலியூர் ரெயில் நிலையத்தில் இருந்து 9 மற்றும் 10-ம் தேதி இரவு 8.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர் ரெயில் நிலையங்கள் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 11.08 மணிக்கு வந்தடைகிறது.

பின்னர், திருவண்ணாமலையில் இருந்து இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு போளூர் , ஆரணி சாலை வழியாக வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தை நள்ளிரவு 1 மணிக்கு சென்றடைகிறது.

வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் 10 மற்றும் 11-ம்தேதி அதிகாலை 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் ஆரணி சாலை, போளூர் ரெயில் நிலையம் வழியாக திருவண்ணாமலைக்கு அதிகாலை 3.02 மணிக்கு வந்தடைகிறது.

பின்னர் அங்கிருந்து அதிகாலை 3.04 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாகவே சென்று கடலூர் திருப்பாதிபுலியூருக்கு காலை 5.55 மணிக்கு சென்றடைகிறது.

வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து 9, 10 மற்றும் 11-ம் தேதி இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 11.25 மணிக்கு வந்தடைகிறது.

பின்னர் திருவண்ணாமலையில் இருந்து 10, 11 மற்றும் 12-ம்தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாகவே மீண்டும் வேலூருக்கு காலை 5.55 மணிக்கு சென்றடைகிறது.

ஹவுராவில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரெயில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் 10-ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு நிறுத்தப்பட்டு, 5.23 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

இதேபோல் புதுச்சேரியில் இருந்து ஹவுரா செல்லும் விரைவு ரெயில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் 11-ம் தேதி மதியம் 2.48 மணிக்கு நிறுத்தப்பட்டு, 2.49 மணிக்கு புறப்பட்டு செல்லும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னையில் இருந்து வேலூருக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News