செய்திகள்
பாஜக சர்வாதிகாரம் நீண்டநாள் நீடிக்காது- நமச்சிவாயம் கருத்து
பாஜக சர்வாதிகாரம் நீண்டநாள் நீடிக்காது என்று புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மராட்டிய மாநிலத்தில் ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டு குதிரை பேரம் நடத்தி குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பகல் கனவு கண்ட பதவி வெறிபிடித்த பாரதீய ஜனதா கட்சிக்கு ஜனநாயகமும் சட்டமும் சம்மட்டி அடிகொடுத்து இருக்கிறது.
கொள்கை மறந்து கோட்பாட்டை மறந்து பணம் கொடுத்து ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சிக்கு மராட்டிய மாநிலம் சரியான பாடம் கற்பித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சி இனிமேலாவது மக்கள் தீர்ப்பை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். சர்வாதிகாரமும் ஆணவமும் நெடுநாள் நீடித்ததில்லை மக்களாட்சி தத்துவத்தை மறந்தவர்கள் ஆட்சியில் நிலைத்ததில்லை.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதை மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா முடிவு நாட்டு மக்களுக்கு நன்றாக உணர்த்தியுள்ளது. இனி வரும் காலங்களில் பாரதீய ஜனதா கட்சியின் சுயரூபம் மக்கள் மன்றத்தில் அம்பலப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.