செய்திகள்
கோப்பு படம்

காதலுக்கு இடையூறாக இருந்த பெண்ணை கொன்ற மாணவி - காதலனுக்கு வலைவீச்சு

Published On 2019-11-26 04:52 GMT   |   Update On 2019-11-26 04:52 GMT
கொடைக்கானல் அருகே காதலுக்கு இடையூறாக இருந்த பெண்ணை கொன்று நாடகமாடிய பள்ளி மாணவி கைது செய்யப்பட்டார்.
பெரும்பாறை:

கொடைக்கானல் அருகில் உள்ள பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த கேசவன் மனைவி சுந்தரி (வயது31). இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டு காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மகளை கேசவன் வளர்த்து வருகிறார்.

சுந்தரி அதே பகுதியில் உள்ள முருகன் என்பவரது வீட்டில் வேலை பார்த்தபோது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர். முருகன் சென்னையில் வேலை பார்ப்பதால் சுந்தரி மட்டும் வீட்டிற்கு அடிக்கடி வந்துசென்றுள்ளார்.

கடந்த 22-ந் தேதி சுந்தரி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது தாயார் தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

21-ந் தேதி இரவு சுந்தரியின் வீட்டில் அதே பகுதியை சேர்ந்த உறவினரின் மகள் ராதா (16) பெயர்மாற்றப்பட்டுள்ளது. தங்கி உள்ளார். இவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சுந்தரி இறந்தது குறித்து போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்ணுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். அவரை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் சுந்தரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நானும் ராஜா (16) என்பவரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாக படித்து வருகிறோம். நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம்.

ராஜா என்னை அடிக்கடி வந்து தனிமையில் சந்திப்பது வழக்கம். அதற்காக சுந்தரியின் வீட்டை பயன்படுத்திக் கொண்டோம். சம்பவத்தன்று 3 அடுக்குமாடி கொண்ட சுந்தரியின் 2-வது தளத்தில் நாங்கள் இருவரும் தனிமையில் இருந்தோம். அப்போது அங்கு வந்த சுந்தரி எங்களை பார்த்து கண்டித்தார். மேலும் இது குறித்து எங்களது பெற்றோரிடம் கூறப்போவதாக மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் இனிமேல் இதுபோல் நடக்கமாட்டோம் என அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு சென்று விட்டோம். இருந்தபோதும் இந்த வி‌ஷயத்தை எங்கள் பெற்றோரிடம் கூறி விடுவாரோ? என்று பயந்தோம்.

இதனால் வெளியே செல்வது போல சென்று பின்னர் மீண்டும் வீட்டிற்குள் புகுந்து சுந்தரியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தோம். அதன் பிறகு ராஜா திண்டுக்கல் சென்று விட்டார். சுந்தரியுடனே தங்கி இருந்து மறுநாள் காலையில் சுந்தரி இறந்து விட்டதாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார் ராதாவை கைது செய்து மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். தாண்டிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜாவை தேடி வருகின்றனர்.

பள்ளி பருவத்தில் ஏற்பட்ட காதல் வரம்புமீறும் போது எதையும் செய்ய துணியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மாணவி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இருவரது எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.
Tags:    

Similar News